Saturday, October 6, 2012
ராமானுஜ காவியம் - கவிஞர் வாலி
காவியத் தலைவன்.
பாவேந்தன்
பாரதிதாசன்
பாட்டில் வைத்துப்
பரவிய...
எதிராஜன் -
எனப்படும் ராமானுஜன்தான்...
அற்றை நாளில் -
அதுகாறும்...
தனியார் துறைக்குத்
தாரை வார்த்த முக்தியை -
பொதுத் துறைக்குப்
பெயர்த்து வந்தவன்;உய்வழி -
பேசிய மறைகளைப்
பெட்டியில் மறைக்காது -
தேசிய மயமாக்கி
தேசத்தவர்க்குத் தந்தவன் !
இவன்
இயற்றிய
சமயப் புரட்சி - ஓர்
இமயப் புரட்சி !
அரிசனம்;
அயல்சனம்; இரண்டும் -
சரிசனம் - என
சாதித்தது இவன் தராசு;
உடனே -
உறுமியது வைதிக மிராசு !
வர்ணங்கள் நான்கால்
வரையப் பெற்றிருந்த -
மன்பதை -
என்பதை...
ஒரே வர்ணத்தால் - இவன்
ஒஹோவென வரைந்தான்;
வழக்கம்போல் -
வைதிகன் இரைந்தான் !
இவன் -
கீழ்சாதிமேல் கைபோட்ட
மேல்சாதி; இதனை -
முதன் முதல் செய்த
முப்புரி நூல்சாதி !
தீண்டாமையைத் -
தீண்டியே கொன்றான்;
நிற்க -
நிழலற்ற...
சாயச் -
சுவரற்ற...
தெருக்குலத்தார் தம்மைத் -
திருக்குலத்தார் என்றான் !
இது மட்டுமா விந்தை?
இன்னும் இயற்றினான்
எந்தை !
காமக்கிரியை புரியும்
கணிகையர்குலப் பெண்ணுக்கு -
ஈமக்கிரியை புரிந்தான்;
புள்ளினம் யாவிற்கும்
பறந்திட இடங்கொடுக்கும் -
வெள்ளிவானாய் விரிந்தான் !
ஈர மனத்தவன்; ஈ எனாமலே -
ஈயும் இனத்தவன் !
இருக்கும் நீரெலாம் -
இரக்கும் நிலத்திற்கீந்து -
இறக்கும் மேகமும் -
இவனும் ஒன்று;
நரகம் வருமென -
நன்கு தெரிந்தும்...
ஓதற் கரிய
ஒரு மந்திரத்தை - ஊர் உய்ய
ஓதினான் கோபுர
உச்சியில் நின்று !
இது மட்டுமா விந்தை?
இன்னும் இயற்றினான் எந்தை !
முக்கா டிடுகின்ற -
முகமதியப் பெண்ணுக்கு -
நிக்கா முடித்தான் -
நாராயண னோடு;
அரங்கன்பால் -
அவளுக் கிருந்த...
அலுக்க வொண்ணாத
அன்பைக் கண்டு - அவளைத்
துலுக்க நாச்சியாய்த்
துதிக்கிறது நாடு !
ஆக -
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே...
மதப்புரட்சி செய்த
மகான்;
இவன் கைக்குள்
இருந்தது -
சண்டித்தனம் செய்த
சனாதனக் குதிரையின் லகான் !
இருபதாம் நூற்றாண்டின் - இரு
இணையற்ற சிந்தனையாளரோடு...
உவமித்து ராமானுஜனை -
உரைக்கப் போயின்...
பூணூல் -
போட்டிருந்த -
பெரியார் எனலாம்; திருமண் -
ஆறிரண்டு -
அணிந்திருந்த -
அம்பேத்கர் எனலாம் !
Sunday, June 7, 2009
கவிஞர் வாலியின் கவிதைகள்
எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்
ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்
மாமியார்
கசடதபற
மாமனார்
ஙஞணநமன
மணவாழன்
யரலவழள
மருமகள்
நான் மட்டும்...
அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக (ஃ)
அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்
அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து
அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்
இப்பொழுது...
மாமியார்
மாமனார்
மணவாழன்
மூவரும் என்
முந்தானைக்குள் !
Subscribe to:
Posts (Atom)